மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி திருவொற்றியூர் அரசு பள்ளி மாணவன், மாணவிக்கு தங்கம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா அரசுப் பள்ளியில் 1,800 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் குறுவட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர். அதன்படி கடந்த 18ம் தேதி ராணிப்பேட்டையில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடந்தது. இதில் 23 கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான சிலம்ப வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் ஜனார்த்தனன் என்ற மாணவன் முதலிடம் பெற்று தங்கம் வென்றார். தொடர்ந்து மாநில அளவில் நடந்த சிலம்பப் போட்டியில் பங்கேற்று 3வது இடம் பிடித்து வெண்கலமும் வென்றார். இதேபோல் அங்கு 12ம் வகுப்பு படிக்கும் ஜா என்ற மாணவியும் மாவட்ட அளவில் நடந்த போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். சிலம்ப போட்டியில் அபாரமாக விளையாடி தங்கம் வென்ற மாணவன் ஜனார்த்தனன், மாணவி ஜா ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியை வெற்றிச்செல்வி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

The post மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி திருவொற்றியூர் அரசு பள்ளி மாணவன், மாணவிக்கு தங்கம் appeared first on Dinakaran.

Related Stories: