காவலர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழாவில் டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்பு

சென்னை: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில், சேலையூர் அடுத்த பதுவஞ்சேரி பகுதியில் காவல் அதிகாரிகள், காவலர்கள் கலந்துகொண்ட சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமை வகித்தார். விழாவில், டிஜபி சங்கர் ஜிவால், மனைவியுடன் கலந்து கொண்டார். உறியடி, கோலப்போட்டி, கயிறு இழுத்தல், லெமன் ஸ்பூன், மியூசிக்கல் சேர் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற காவலர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘‘காவலர்களுக்கு வீடு முக்கியமானது. தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் சிறப்பாக நடவடிக்கை எடுத்து பெரும்பாக்கத்தில் 5 ஏக்கர் நிலம் அரசு மூலம் பெற்று அந்த பகுதியில் ரூ.800 கோடியில் 400 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதேபோல காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு மருத்துவ காப்பீடுகள் உள்ளன. இருந்தபோதிலும் மருத்துவ காப்பீடுகளை பெறும்போது காலதாமதம் மற்றும் காப்பீடாக குறைந்த தொகை வருவதாக புகார் வந்தது. இதை சரி செய்ய தமிழ்நாடு காவல்துறை முடிவு செய்துள்ளது. இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது அது ரூ.15 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. காவலர் ஒருவருக்கு இழப்பீடு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து, ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது’’ என்றார். இதுபோல, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக, மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில், டிஜிபி சங்கர் ஜிவால், வடக்கு மண்டல காவல் துறை தலைவர் கண்ணன், காஞ்சிபுரம் சரக காவல் துறை துணை தலைவர் பொன்னி, செங்கல்பட்டுஎஸ்பி சாய் பிரணீத் ஆகியோர் பங்கேற்றனர். பிறகு கபடி மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

The post காவலர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழாவில் டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: