அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயர்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை கிராமத்தில் ரூ.44 ேகாடி மதிப்பீட்டில் 66 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு கலையரங்கம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராகியுள்ளது. இந்த கலையரங்க மைதானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை கலெக்டர் சங்கீதா, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: இந்திய அளவில் வீர விளையாட்டுக்கென்று தனியாக ஒரு மைதானம் அமைந்திருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். பல்வேறு வசதிகளுடன் கூடிய பிரமாண்ட கலையரங்க மைதானம் கட்டப்பட்டுள்ளது. கலையரங்கத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பெயர் சூட்டப்பட உள்ளது. ஜல்லிக்கட்டிற்கு ஏற்பட்ட தடைகளை நீக்கி, திமுக ஆட்சியில் தான் நிரந்தர தீர்வு காணப்பட்டது. ஜல்லிக்கட்டு மைதானம் குறித்தும், மைதானத்திற்கு வைக்கக்கூடிய பெயர் குறித்தும் எதிர்க்கட்சிகளும், ஊடகவியலாளர்களும் பேசும் சர்ச்சை பேச்சு இயல்பானதுதான். ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது உண்டு. அந்த சுதந்திரத்திற்கு யாரும் தடை போட முடியாது. பெரும்பான்மை மக்கள் விருப்பத்திற்கு ஏற்பவும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியே டாக்டர் கலைஞரின் பெயர் சூட்டப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயர்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: