மேட்டுப்பாளையம் சிவன்புரம் ஐயப்பன் கோயிலில் மண்டல மகோற்சவ திருவிழா

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிவன்புரத்தில் ஐயப்ப சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஐயப்ப சேவா சமிதியின் 64வது ஆண்டு விழா மற்றும் 33வது ஆண்டு மண்டல மகோற்சவ திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த நவ.11ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுற்று விளக்கு, நிறைமாலை, புஷ்பாபிஷேகம், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் 33ம் ஆண்டு மண்டல நிகழ்ச்சிகள் ஸ்ரீ மாதேஸ்வர சுவாமி கோயிலில் சிறப்பு பூஜையுடன் துவங்கியது.

தொடர்ந்து கொடியேற்றம், சர்ப்ப பலி பூஜை, பட்டமளிப்பு விழா, ஆன்மீக சொற்பொழிவு, பரதநாட்டியம் தாயம்பாக, பள்ளி வேட்டை, உஷ பூஜை,ஆறாட்டு, கொடிக்கல் பறை, கொடி இறக்குதல், கலசாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதைத் தொடர்ந்து நேற்று மாலை மைதானம் மகா மாரியம்மன் கோயிலில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்ப சாமி ஊர்வலம் துவங்கியது. கோவில் தலைவர் அச்சுதன் குட்டி தலைமையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்ப சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், வண்ணம் முளையின் காவு குட்டி கொம்பன் குழுவினரின் இன காளையுடன், பஞ்ச வாத்தியம், கலாசமிதி மாயனூர் குழுவினரின் சிங்காரி மேளம், கதகளி வேடம் அணிந்தவர்களுடன் அரச மர விநாயகர் கோயிலில் இருந்து பெண்கள் தீபதாளங்கள், பஞ்சவாத்தியங்கள் முழங்க ஐயப்ப பக்தர்களின் சரண கோஷத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தது. தொடர்ந்து வான வேடிக்கை, மஹா தீபாராதனையும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த மகோற்சவ திருவிழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post மேட்டுப்பாளையம் சிவன்புரம் ஐயப்பன் கோயிலில் மண்டல மகோற்சவ திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: