கடலூர்: வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் முயற்சியின் காரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் வட்டங்களில் ஓடும் பரவனாற்றில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை குறைக்கும் வண்ணம் ஆற்றின் குறுக்கே அருவாள்மூக்கு என்ற இடத்தில் கடைமடை ஒழுங்கியம் கட்டுதல் மற்றும் கடலுக்கு புதிதாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.81.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் சுரங்க நீர் மற்றும் மழைநீர் பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழைநீர் ஆகியவற்றை கொண்டு செல்லும் பரவனாறு மேல்பரவனாறு, நடுபரவனாறு மற்றும் கீழ்பரவனாறு என மொத்தம் 58.80 கி.மீ. தூரம் பயணித்து அருவாள்மூக்கு வழியாக சென்று கடலூர் பழைய துறைமுகம் அருகில் கடலில் கலக்கிறது.
வெள்ள காலங்களில் குறிப்பாக 35.00 கி.மீ தூரம் உள்ள கீழ்பரவனாறு தனது புவியியல் மற்றும் இடவியல் காரணமாக குறைந்தபட்ச சமன்மட்டம் ( ஒன்றில் 15000) உள்ளதால் இந்த ஆறு வெள்ள நீரை விரைவாக வெளியேற்ற இயலாத நிலை உள்ளது. இதனால் ஒவ்வொரு வருடமும் மழைகாலங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள 24 கிராமங்கள் வெள்ளநீரில் மிதந்து பாதிப்படைவதோடு ஆற்றினை சுற்றியுள்ள சுமார் 15,600 ஏக்கர் விளை நிலங்கள் வெள்ள நீரில் முழ்கி பாதிப்படைந்து வருவது தொடர் கதையாக இருந்து வந்ததது. மேலும் கடல் நீர் பின்நோக்கி வந்து சுமார் 25.00 கி.மீ தூரம் உப்பு நீராக மாறி விவசாயம் செய்ய இயலாத சூழல் இருந்து வந்ததது.
இவ்வாறு ஏற்படும் வெள்ள பெருக்கை விரைவாக கடலில் வடியவைக்கும் பொருட்டு அருவாள்மூக்கு என்ற இடத்தில் கடைமடை ஒழுங்கியம் கட்டவும் மேலும் மேற்படி இடத்திலிருந்து 12.00 கி.மீட்டர் தூரம் சென்று ஆறு கடலில் கலப்பதை தவிர்த்து 1.60 கி.மீ. தூரத்தில் அருகாமையில் உள்ள கடலில் வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் புதிய கால்வாய் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. மேலும் இத்திட்டம் செயல்படுவதற்கான நிலஆர்ஜிதம் பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயச் சங்கங்கள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இதன் பேரில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து சென்று இத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன் அடிப்படையில் முதலமைச்சர் மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.81.12 கோடி மதிப்பீட்டுத் தொகைக்கு அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவின் கீழ் வழங்கியுள்ளார். இப்பணி மேற்கொள்ளப்படும் பட்சத்தில் வருடாவருடம் வெள்ளத்தினால் பாதிப்படையும் சுமார் 15,600 ஏக்கர் விளை நிலங்கள் பாதுகாக்கப்படுவதோடு அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகையும் சேமிக்கப்படும் வெள்ள காலங்களில் பரவனாற்றின் புதிய கால்வாயின் மூலம் வெள்ளநீர் விரைவில் வடிந்து ஆற்றினை சுற்றியுள்ள சுமார் 24 கிராமங்கள் பாதுக்காக்கப்படும்.
மேலும் அருகிலுள்ள 24 கிராமங்களிலிருந்து விவசாய பொருட்கள், கால்நடைகள், மனித உயிர்கள் போன்றவை பாதுகாக்கப்படுவதோடு கடைமடை ஒழுங்கியம் மூலம் கடல் நீர் உட்புகுவதும் தடுக்கப்படும் .இதனால் விவசாயம் செழித்து மக்கள் வாழ்வாதாரம் மேம்படும். இத்திட்டம் இன்னும் ஒரிரு மாதங்களில் தொடங்கப்பட்டு ஒருவருட காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு – கொள்ளிடம் வடிவில போட்ட சிதம்பரம் நீர்வளத்துறை இதற்கான திட்டப் பணிகளை கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்ள உள்ளது.
The post கடலூர் மாவட்டத்தில் அருவாள்மூக்கு திட்டத்திற்கு ரூ.81.12 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.