திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல் பத்து உற்சவத்தின் 9ம் நாளான இன்று காலை முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். நாளை மோகினி அலங்காரமும், நாளை மறுநாள் சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது. பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12ம் தேதி இரவு திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து உற்சவம் 13ம் தேதி காலை துவங்கியது.
தினமும் காலை நம்பெருமாள் பல்வேறு கொண்டை அலங்காரத்தில் திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து ஆழ்வார்களுடன் புறப்பட்டு அர்ச்சுன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பகல்பத்து 9ம் திருநாளான இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் தெள்ளியீர் பாசுரம், முத்துக்குறி-வியாக்யானம் நாளின் அபிநயத்திற்கேற்ப முத்துக்கொண்டை அலங்காரத்தில், முத்து கபாய், முத்து நேர் கிரீடம், பங்குனி உத்திர பதக்கம், தாயார் பதக்கம், ரங்கூன் அட்டிகை, முத்து அபய ஹஸ்தம், முத்து கர்ண பத்ரம், முத்து திருவடி, 2 வட முத்து மாலை, பின் சேவையில் முத்தங்கி அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார். நாளை(22ம் தேதி) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். நாளை மறுநாள் அதிகாலை 4 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. இதைத்தொடர்ந்து 23ம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. 29ம் தேதி நம்பெருமாள் கைத்தல சேவை, 30ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி, ஜன.1ம் ேததி தீர்த்தவாரி, 2ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.
The post வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கத்தில் நாளை மறுநாள் சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.