இன்று உலக மனித உரிமைகள் நாள் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் இதயம் கொண்டது திமுக அரசு: மனிதம் காக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: திமுக அரசு எந்த இடத்தில், எவர், எதனால் பாதிக்கப்படுகிறார்களோ, அந்த இடத்திற்கு, உடனே விரைந்து சென்று பாதிப்பிலிருந்து அவர்களை விடுவித்து காப்பாற்றும் இதயம் கொண்டது என்றும், மண்ணில் மனிதம் காக்க உறுதி ஏற்போம் என்றும் உலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இன்று “உலக மனித உரிமை நாள்” கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 75வது ஆண்டு ஆகும். அவ்வகையில் “அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி” என்பதை இந்த ஆண்டிற்கான மனித உரிமைகள் நாள் கருப்பொருளாக ஐக்கியநாடுகள் சபை அறிவித்துள்ளது. 1948 டிசம்பர் 10ம் நாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்று வெளியிட்டது. அதை ஏற்றுக்கொள்வதில் முக்கியப் பங்காற்றிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனை தொடர்ந்து இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டப்படி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில்தான் திமுக அரசு மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நிகழக்கூடாது எனும் எண்ணத்துடன் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தலைமையில், “தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்” எனும் பு
திய அமைப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆணையம், இந்திய அரசியல் சட்டமும், நீதிமன்றங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் அளித்திடும் வாழும் உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, சுதந்திரம் போன்றவைகளை நிலைநாட்டுவதற்காகப் பாடுபடுகிறது. இந்த ஆணையம் தொடங்கப்பட்டது முதல் 2023 செப்டம்பர் வரை வரப்பெற்ற 2 லட்சத்து 60 ஆயிரத்து 55 முறையீடுகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 2 லட்சத்து 17 ஆயிரத்து 918 முறையீடுகள் மீது தீர்வு கண்டு, ஆணை பிறப்பித்து நலிந்தவர்களின் நலன் காக்கும் திருப்பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறது. எந்த இடத்தில், எவர், எதனால் பாதிக்கப்படுகிறார்களோ, அந்த இடத்திற்கு, உடனே விரைந்து சென்று அவருக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அவரை விடுவித்துக் காப்பாற்றும் இதயம் கொண்டது இந்த அரசு. மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு நரிக்குறவர் சமுதாயப் பெண்ணும், அவரது குழந்தையும் அப்பகுதியில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்குகொள்ளச் சென்றபோது, சிலர் அவர்களை தடுத்துத் திருப்பி அனுப்பிய செய்திகேட்டு, அறநிலையத்துறை அமைச்சர் மூலம் அவர்கள் விருந்தில் பங்கு பெறச் செய்ததுடன் அடுத்து, பூஞ்சேரியில் அந்த பெண்ணின் இல்லம் சென்று, ஆறுதல் கூறியது இந்த அரசு. அத்துடன், அப்பகுதி வாழ் நரிக்குறவர் மற்றும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 282 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உள்பட பல நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களை பெருமைப்படுத்தியதும் இந்த அரசுதான்.

அதேபோல, மகளிர்க்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச்சலுகை வழங்கியதுடன் 2023 செப்டம்பர் 15, அண்ணா பிறந்த நாளில் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கிவைத்து, இது உதவித் தொகையல்ல, உரிமைத்தொகை என்று கூறி மகளிர் சமுதாய உரிமையைப் போற்றி, நலிந்தவர் நலம் காக்கும் நல்ல அரசாகத் திகழ்கிறது இந்த அரசு என்பதை இவ்வேளையில் சுட்டிக் காட்டிட விரும்புகிறேன். இந்த உணர்வோடு, மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் முற்றிலும் தடுப்போம். அதற்கு உறுதுணையாக ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் செயல்படுவோம். மண்ணில் மனிதம் காப்போம் – என அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

The post இன்று உலக மனித உரிமைகள் நாள் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் இதயம் கொண்டது திமுக அரசு: மனிதம் காக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: