மீட்பு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவுபடுத்தி வருகிறார். அனைத்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்லர்கள் என பலரும் கடந்த 3 நாட்களாக பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள். இதன்மூலம் 80 சதவீதத்திற்கும் மேல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் சரி செய்யப்பட்டுள்ளது.
‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிட கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட ஒன்றிய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருவதாக கூறப்படுகிறது. அவர் ஹெலிகாப்டர் மூலம் இன்று பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணி வரை பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுகிறார்.
அப்போது ஒன்றிய அமைச்சர் முருகன், தமிழக நிதி மற்றும் மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோரும் உடன் செல்கின்றனர். பின்னர் தலைமை செயலகம் வரும் ராஜ்நாத் சிங் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் 1.30 மணி முதல் 2.30 மணி வரை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், வெள்ள பாதிப்புகளை சரி செய்திட விரைவில் ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.
The post வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருகை: முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார் appeared first on Dinakaran.
