தஞ்சாவூர் விளார் புறவழிச்சாலை பகுதியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (70). இவர் தஞ்சை அருகே காசவளநாடுபுதூர் கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கரும்பு சாகுபடி செய்துள்ளார். அறுவடைக்கு தயாராக வளர்ந்து வரும் கரும்புகளை அணில்கள் சேதப்படுத்தி வருகின்றன. அணில்களிடமிருந்து கரும்புகளை காப்பாற்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பலனில்லை. இதையடுத்து விவசாய ஆலோசகர் கோபுராஜ் வழிகாட்டுதல்படி பல வண்ண பலூன்களை கரும்பில் கட்டி தொங்க விட்டார். காற்றில் பலூன்கள் அசைவதால் அணில்கள் வராது என்றும், இதனால் அணில்கள் கரும்பில் ஏறுவது தடுக்கப்பட்டு கரும்பு பயிர் சேதமின்றி காப்பாற்றப்பட்டு வருகிறது என்று செல்வராஜ் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
இது குறித்து விவசாய ஆலோசகர் கோபு கூறுகையில், அணில்களுக்கு பல வண்ணங்கள் பிடிக்காது. அதனால் பல வண்ண பலூன்களை தொங்க விடும் போது அணில்கள் வராது. மேலும் வெயில் நேரங்களில் பலூன்கள் வெடிக்கும் போது அந்த சத்தத்திற்கும் அணில் கரும்புகளை அண்டாது. வெடிக்கும் பலூன்களுக்கு மாற்றாக புதிய பலூன்களை கட்டி தொங்க விட வேண்டும். இதற்கான செலவு மிகக் குறைவு தான். இப்படி அறுவடை முடியும் வரை தொடர்ந்து செய்வதன் மூலம் அணில்கள் தொல்லையில் இருந்து கரும்புகளை முழுமையாக காப்பாற்றலாம் என்றார். பயிர்கள் சேதமடைவதை தடுக்க விஷம் வைத்து விலங்குகளை கொல்லாமல், அணில்கள் வராமல் தடுக்க இந்த புதிய முயற்சி பாராட்டை பெற்றுள்ளது.
The post அணிலால் கரும்பு பயிர் சேதம் கலர் பலூன்கள் கட்டி தடுப்பு: வில்லேஜ் விஞ்ஞானி அசத்தல் appeared first on Dinakaran.