சீர்காழி நகரில் சாலையில் சுற்றித்திரிந்த 14 மாடுகள் பிடித்து அகற்றம்: உரிமையாளர்களுக்கு அபராதம்

சீர்காழி: சீர்காழி நகரில் சாலையில் சுற்றித்திரிந்த 14 மாடுகளை பிடித்து அகற்றி அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்து வருவதால் பொதுமக்கள் வியாபாரிகள் மாணவ மாணவிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மேலும் மாடுகள் சாலைகளை திடீர் என்று கடக்கும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. சில சமயங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் மாடுகளால் ஏற்பட்டு வருகின்றன. மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை அவிழ்த்து விட்டு அதனை கண்டு கொள்வது இல்லை. மாடுகள் கால் போன போக்கில் சுற்றி திரியும் போது மாடுகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவமும் நடந்து வருகிறது.

மாடுகளை சாலையில் திரிய விடக்கூடாது என நகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரித்தும் மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை சாலைகளில் திரிய விடுவதை தடுக்கவில்லை. இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் ஆலோசனையின் பேரில் நகராட்சி மேற்பார்வையாளர் கலியபெருமாள், இளநிலை உதவியாளர் பாபு, நகராட்சி பரப்புரையாளர் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சீர்காழி நகரில் சுற்றித்திரிந்த 14 மாடுகளை பிடித்து நகராட்சி வளாகத்திற்கு கொண்டு வந்து கட்டி வைத்திருந்தனர். தொடர்ந்து மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளுக்கு அபராதம் செலுத்தி மாடுகளை மீட்டு சென்றனர். தொடர்ந்து மாடுகளை சாலைகளில் திரியவிட்டால் மாடுகளின் உரிமையாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

The post சீர்காழி நகரில் சாலையில் சுற்றித்திரிந்த 14 மாடுகள் பிடித்து அகற்றம்: உரிமையாளர்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: