லாரியில் கடத்திய 2.50 டன் வெடி பொருட்கள் பறிமுதல்

சேலம்: சேலம் மாவட்டம் கருப்பூர் சுங்கச்சாவடியில் போலீசார் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் சோதனை நடத்திகொண்டிருந்தனர். அப்போது தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து வந்த லாரியை சோதனையிட்டபோது வைக்கோல் போருக்குள் சுமார் 100 பெட்டிகள் இருந்தன. அதனை திறந்து பார்த்தபோது அதில், ஜெலட்டின் குச்சிகளும், வெடிபொருட்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு பெட்டியிலும் தலா 25 கிலோ வெடிபொருட்கள் என மொத்தம் 2.50 டன் வெடிபொருட்கள் இருந்தன. இதையடுத்து, லாரி டிரைவர் இளையராஜாவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ‘லாரியை பென்னாகரத்தில் இருந்து கோவைக்கு கொண்டு செல்வதாகவும், அதில் வெடிபொருட்கள் இருப்பது தனக்கு தெரியாது’ என்று கூறினார்.

ஆனால், இந்த பிடிபட்ட வெடி பொருட்கள், பென்னாகரத்தில் அரசு அனுமதி பெற்ற வெடிபொருள் குடோனில் இருந்து தான், ஏற்றி வந்தது என்று தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, வெடி பொருட்கள் இருந்த லாரியை மாநகர துப்பாக்கி சுடும் மையத்திற்கு பாதுகாப்புடன் போலீசார் கொண்டு சென்றனர்.

The post லாரியில் கடத்திய 2.50 டன் வெடி பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: