இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை 5:15 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். கவர்னருடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர். அப்போது சென்னை விமான நிலையத்திற்கு வந்த கவர்னர் ரவி, வழக்கமாக மீனம்பாக்கம் விமான நிலையத்தின் 6வது கேட் வழியாக காரில் உள்ளே சென்று, விமானம் நிற்கும் இடத்தில் இறங்கி விமானத்தில் ஏறுவார். ஆனால் நேற்று வழக்கத்துக்கு மாறாக திரிசூலம் விமான நிலைய உள்நாட்டு முனைய டெர்மினல் 1ல் அனைத்து வகை பயணிகளும் செல்லும் வழியாக சென்று விமானத்தில் ஏறினார்.
கவர்னரின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவென்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, 6வது கேட் என்பது பாதுகாப்பு மிகுந்தது. விஐபிகளின் கார்கள் மட்டுமே அதன் வழியாக உள்ளே செல்ல முடியும். ஆனால் நேற்று கவர்னருடன் அவருடைய 18 வயது பேரன் ஒருவரும், டெல்லி செல்ல வந்தார். கவர்னரின் பேரனுக்கு 6வது நுழைவு வாசல் வழியாக செல்வதற்கு அனுமதி இல்லை. இதனால் கவர்னர் காரில் நேரடியாக பேரனுடன் உள்நாட்டு விமான நிலையம் வந்து, சாதாரண பயணிகளோடு விமானத்துக்குள் ஏறி சென்றார் என்றனர். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் கவர்னர் ரவி இன்று காலை 10:30 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மீண்டும் சென்னை திரும்புகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி செல்லும் கவர்னர், ஒன்றிய உள்துறை அமைச்சர் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கவர்னர் மீது, தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு இன்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கவர்னரின் இந்த திடீர் டெல்லி பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கில் இன்று விசாரணை ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்: மாற்று வழியில் சென்று விமானத்தில் ஏறினார் appeared first on Dinakaran.