இந்நிலையில், தாங்களும் கொரோனா காலத்தில் பணியாற்றியதாகக் கூறி பாரபட்சமான இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தனியார் மருத்துவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். கொரோனா காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு கோவிட் பணிச் சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவ மேற்படிப்பு மாணவர்களும் வழ க்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கொரோனா காலகட்டத்தில் 84 சதவீத நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற்றனர்.
தனியார் மருத்துவர்கள் கொரோனா பணியாற்றினார்களா என்று சரிபார்க்க எந்த நடைமுறையும் இல்லை. தனியார் மருத்துவர்களும் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை. மருத்துவ மேற்படிப்பு மாணவர்களை பொறுத்தவரை, 36 மாதங்கள் பணியாற்றிய காலத்தை பயிற்சி காலமாகத்தான் கருத முடியும் என்பதால் அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. தனியார் மருத்துவர்கள் வழக்கை பொறுத்தவரை அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் முடிவில் தவறில்லை என்று தெரிவித்தனர்.
கொரோனா காலத்தில் தனியார் மருத்துவர்களின் சேவையும் பாராட்டும் வகையில் இருந்தாலும், அவர்கள் கொரோனா பணியாற்றினார்களா என்று சரிபார்க்க நடைமுறை ஏதும் இல்லை என்பதாலும், ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதாலும், அரசின் முடிவு அரசியலமைப்பு விதிகளை மீறியது ஆகாது எனக் கூறி தனியார் மருத்துவர்களின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பயிற்சி மருத்துவர்களும் அரசு மருத்துவர்களுக்கு இணையாக பணியாற்றியுள்ளனர். உயிரையே துச்சமாக மதித்து பணியாற்றிய அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் பெற உரிமை உள்ளது. பயிற்சி மருத்துவர்கள் 10 நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி கோவிட் பணி சான்றிதழ் கோரலாம். அந்த கோரிக்கையை ஏற்று 5 நாட்களில் கோவிட் பணி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
The post அரசு மருத்துவர்கள் தேர்வில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண் பெற பயிற்சி மருத்துவர்களுக்கும் உரிமை உண்டு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.