தன்னலமற்ற தனது தியாகத்தினால், அம்மாவட்ட மக்களின் மனங்களில் இன்றும் உயர்ந்து நிற்கும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் நினைவினைப் போற்றிடும் வகையில், அவரின் பிறந்த நாளான நவம்பர் 15 அன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கிணங்க, அவரின் புகழுக்கு மென்மேலும் பெருமைச் சேர்க்கின்ற வகையில் அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் 13.11.2021 அன்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தூத்துக்குடி மாநகர மக்களின் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் பிறந்த நாளான நேற்று தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் 77 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள குவிமாடத்துடன் கூடிய அவரது திருவுருவச் சிலையை காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மருத்துவர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post ரூ.77.87 லட்சம் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் திருவுருவச் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.