வங்கக்கடலில் வரும் 15ம் தேதி காற்றழுத்தம் உருவாகும்

சென்னை: வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, வங்கக் கடலில் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நேற்று மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 90 மிமீ மழை பெய்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அம்பத்தூர், புழல், திருவிக நகர், வானகரம், கொளத்தூர், திருவொற்றியூர், சென்னை டிஜிபி அலுவலகம், மாதவரம், குன்றத்தூர், கத்திவாக்கம், எம்ஜிஆர் நகர், செம்பரம்பாக்கம், வில்லிவாக்கம், செங்குன்றம், ஆலந்தூர், நந்தனம், அண்ணா பல்கலைக் கழகம், தண்டையார்பேட்டை, கொளப்பாக்கம், முகலிவாக்கம், ஐஸ்அவுஸ், மதுரவாயல், பெரம்பூர், காட்டுப்பாக்கம், பூந்தமல்லி, மீனம்பாக்கம், தேனாம்பேட்டை, சென்னை விமான நிலையம், கோடம்பாக்கம், அடையார், அயனாவரம், சோழவரம், அண்ணா நகர், தாம்பரம், பெருங்குடி, சோழிங்கநல்லூர், வளசரவாக்கம், ஆகிய இடங்களில் 5 மிமீ முதல் 10மிமீ வரை மழை பெய்தது.

இதற்கிடையே, ஈரோடு, வேலூர் மாவட்டத்தில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. கன்னியாகுமரி, கரூர், சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், தென்கிழக்கு மற்றும் அதைஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி 15ம் தேதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 15ம் தேதி வரை ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

The post வங்கக்கடலில் வரும் 15ம் தேதி காற்றழுத்தம் உருவாகும் appeared first on Dinakaran.

Related Stories: