நெல்லையில் அரசு தொழில் மைய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 250க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள், ரொக்கம் பறிமுதல்..!!

நெல்லை: முன்னாள் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முருகேசன் வீட்டில் நடத்திய சோதனையில் 250-க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை ரகுமத்நகரை சேர்ந்தவர் முருகேசன். இவர் நெல்லை மாவட்ட அரசு தொழில் மையத்தில் மேலாளராக பணியாற்றிய காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, நேற்று காலை 7 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மெக்லரின் எஸ்கால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், சீதாராமன் மற்றும் ஏட்டுகள் பிரகாஷ், ஜேம்ஸ், ராபின் ஆகியோர் அடங்கிய குழுவினர் ரகுமத்நகரில் உள்ள முருகேசன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் சோதனை நடத்தினர். இரவு 9 மணி வரை சோதனை நடைபெற்றது. இந்நிலையில், முருகேசன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 250-க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சுமார் 8 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக முருகேசன் மற்றும் அவரது மனைவி சகிலா மீது நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முருகேஷ் கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மையத்தில் மேலாளராக பணியாற்றிய போது, அங்கு அவர் துறை ரீதியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

The post நெல்லையில் அரசு தொழில் மைய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 250க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள், ரொக்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: