கத்துக்குட்டி அண்ணாமலை திருந்த வாய்ப்பே இல்லை கட்டப்பஞ்சாயத்துக்காரன் கந்துவட்டிக்காரன் கட்சி பாஜ: ஒரு தொகுதியில்கூட டெபாசிட் வாங்க முடியாது; அதிமுக மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளாசல்

நிலக்கோட்டை: ‘கத்துக்குட்டி அரசியல்வாதி அண்ணாமலை. கட்டப்பஞ்சாயத்துக்காரன், கந்து வட்டிக்காரன் என பாதி ரவுடிகள் உள்ள கட்சி பாஜ என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் காட்டமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் நேற்றுமுன்தினம் மாலை நடந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: அதிமுகவின் வெற்றியை பாஜ தொடர்ந்து தடுத்து வந்தது. பாஜவுடன் இருந்தபோது காலில் கட்டையை கட்டி கொண்டு ரேசில் ஓடியது போல் இருந்தது.

தற்போது விலகி உள்ளதால் எங்களை பிடித்திருந்த பீடை விலகி உள்ளது. தொண்டர்களும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளனர். இரண்டு ஆண்டுகள் கூட அரசியல் அனுபவம் இல்லாத கத்துக்குட்டி அரசியல்வாதி அண்ணாமலை. எல்லாம் தெரிந்தவர் போல் பொய்களை அள்ளி வீசி ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, நம்மை கடித்து விட்டார். கூட்டணியில் இருந்து கொண்டு ஜெயலலிதா, அண்ணா, பெரியாரை விமர்சனம் செய்கிறார். கூட்டணி தர்மம் என்னவென்றே தெரியாதவர். திருந்துவார் என்றால், திருந்த வாய்ப்பில்லை.

மோடியின் அரசியலை பற்றி கூட தெரியாமல் ‘என் மண் என் மக்கள்’ என்ற சுயநல பிரசாரம் செய்து வரும் அண்ணாமலை சொந்த கட்சியிலும் பல மூத்த தலைவர்களை மதிப்பதில்லை. அதிமுகவுக்கென தனி கொள்கை, குறிக்கோள், லட்சியம் இருக்கிறது. அவர்களது கொள்கையால் தமிழ்நாட்டில் ஒரு காலத்திலும் வெற்றி பெறமுடியாது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. பக்குவம், அனுபவம் இல்லாதவர் தன்னை அரசியல்வாதி என கூறி கொள்கிறார். தமிழ்நாட்டில் கட்டப்பஞ்சாயத்துக்காரன், கந்து வட்டிக்காரன் என பாதி ரவுடிகள் உள்ள கட்சிதான் பாஜ.இவ்வாறு பேசினார்.

The post கத்துக்குட்டி அண்ணாமலை திருந்த வாய்ப்பே இல்லை கட்டப்பஞ்சாயத்துக்காரன் கந்துவட்டிக்காரன் கட்சி பாஜ: ஒரு தொகுதியில்கூட டெபாசிட் வாங்க முடியாது; அதிமுக மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளாசல் appeared first on Dinakaran.

Related Stories: