அமெரிக்காவில் மகனை பார்த்துவிட்டு திரும்பியபோது சோகம் விமானத்தில் வந்த பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னை: அமெரிக்காவில் உள்ள மகனைப் பார்த்துவிட்டு, தனது மனைவியுடன் விமானத்தில் சென்னை வந்து கொண்டிருந்த சென்னை மாதவரத்தை சேர்ந்த பயணி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் சுகிர்தராஜ் (64). இவருடைய மகன் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுகிர்தராஜ் மகனைப் பார்க்க தனது மனைவியுடன் அமெரிக்காவுக்கு சென்றார். இந்நிலையில், அமெரிக்காவில் மகனுடன் 3 மாதங்கள் தங்கி இருந்த பெற்றோர், அவர்களுடைய விசா காலம் முடிவடைந்ததால் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, துபாய் வழியாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை விமானத்தில் இருந்த சுகிர்தராஜ், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, வலியால் துடித்தார். இதை பார்த்து விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த சில மருத்துவர்கள் மற்றும் பணிப்பெண்கள் சேர்ந்து, சுகிர்தராஜிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும், தலைமை விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசினார். இதை அடுத்து நேற்று காலை 8:25 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய இந்த விமானம், 20 நிமிடங்கள் முன்னதாகவே காலை 8.05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர், விமானத்துக்குள் ஏறி சுகிர்தராஜை பரிசோதித்தனர். ஆனால் கடுமையான மாரடைப்பால் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை விமான நிலைய போலீசார் வந்து, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post அமெரிக்காவில் மகனை பார்த்துவிட்டு திரும்பியபோது சோகம் விமானத்தில் வந்த பயணி மாரடைப்பால் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: