ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி: மணப்பாறையில் பரபரப்பு

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை கடந்துதான் மார்க்கெட் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர், இந்நிலையில் சில நேரங்களில் பயணிகள் ரயில்கள் வரும்போது சரக்கு ரயில் மணப்பாறை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும். அப்போது ரயில்வே கேட்டை கடந்து அந்த ரயில் நிற்கும். அந்த நேரத்தில் தண்டவாளகத்தை கடக்க நிற்கும் சிலர் ரயிலுக்கு அடியில் படுத்தபடி நகர்ந்து சென்று ரயிலை கடந்து செல்வார்கள். அதேபோல் நேற்று அங்கு சரக்கு ரயில் நின்றது. அப்போது அங்கு வந்த ஒரு மூதாட்டி அந்த ரயிலின் அடியில் ஊர்ந்து சென்றபடி கடக்க முயன்றார். அப்போது திடீரென ரயில் புறப்பட துவங்கியது. இதனால் மூதாட்டி ரயிலுக்கு அடியில் சிக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அந்த மூதாட்டியை அப்படியே படுத்திருக்கும்படி அப்பகுதியில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். இதைபார்த்த கேட் கீப்பர் உடனடியாக ரயிலை இயக்குபவர்களை தொடர்பு கொண்டு ரயிலின் அடியில் மூதாட்டி சிக்கி இருப்பதை தெரிவித்தார். இதனால் சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மூதாட்டி மீட்கப்பட்டார். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரயிலுக்கு அடியில் மூதாட்டி சிக்கி இருப்பதும், ரயில் சென்றபோது அந்த மூதாட்டியை அப்படியே படுத்திருக்கும்படி அங்கிருந்தவர்கள் கூறுவதும், ரயில் நின்றதும் மூதாட்டி மீட்கப்படும் காட்சி இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி: மணப்பாறையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: