வருசநாடு அருகே மலை கிராமத்திற்கு தார் சாலை தேவை

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வருசநாடு : வருசநாடு அருகே மலை கிராமத்திற்கு தார் சாலை அமைத்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட காந்திகிராமம், முத்துநகர், ஐந்தரைபுலி போன்ற மலை கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் கொட்டைமுந்திரி, இலவம்பஞ்சு, பீன்ஸ், அவரை, கத்தரி, தக்காளி போன்றவற்றை அதிகம் விளைவிக்கின்றனர்.

மேலும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இப்பகுதியில் முறையான தார் சாலை வசதி இதுவரை செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தும்மக்குண்டு கிராமத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தூரம் வரை தலைச்சுமையாக ரேஷன் பொருட்களை தலைச்சுமையாக கொண்டு செல்கின்னர்.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் தினந்தோறும் சேதமடைந்த சாலையில் நடந்து செல்லும் நிலையில் உள்ளனர். இதுதொடர்பாக இப்பகுதி மக்கள் கிராமசபை கூட்டங்கள், கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனாலும் அவர்களின் பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இது குறித்து காந்திகிராமத்தில் வசிக்கும் ஆண்டி கூறுகையில், எங்கள் பகுதிக்கு இதுவரை தார் சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லை.

இதனால் விவசாய பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வது, மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை மாட்டு வண்டி உதவியுடன் விவசாயப் பொருட்களை கொண்டு சென்றோம். தற்பொழுது பலத்த சேதமடைந்த நிலையில் உள்ள சாலையில் அந்த வண்டிகளையும் ஓட்டிச்செல்ல முடியவில்லை. எனவே எங்கள் கனவாக இருக்கும் தார் சாலையை விரைந்து அமைத்துக்கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post வருசநாடு அருகே மலை கிராமத்திற்கு தார் சாலை தேவை appeared first on Dinakaran.

Related Stories: