அதிமுகவுக்கு பதிலடி கொடுக்காமல் எஸ்கேப் அரசியல் கேள்விகளை தவிர்த்த ‘அரசியல்வாதி அண்ணாமலை’

ஊட்டி: அதிமுக-பாஜ கூட்டணி முறிவுக்கு பாஜ மாநில தலைமைதான் (அண்ணாமலை) காரணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் முனுசாமி பேசியது குறித்த கேள்விக்கு அண்ணாமலை ‘எஸ்கேப்’ ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. குன்னூரில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நேற்று நடந்தது. முன்னதாக, நேற்று காலை 10 மணிக்கு இந்த பாதயாத்திரை துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பிற்பகல் 2 மணிக்குதான் பாதயாத்திரை துவங்கியது. இதனால், தொண்டர்கள் பசி மயக்கத்தில் இருந்தனர்.

மேலும், நேரம் ஆக ஆக சிலர் அங்கிருந்து கலைந்து செல்லத் துவங்கினர். குன்னூர் பகுதியில் நேற்று மழை பெய்ததால், மிக குறைவானவர்களே பங்கேற்றனர். தெற்கு ரயில்வேயில் தற்போது அப்ரென்டீசாக பணியாற்றி வரும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அண்ணாமலையை சந்தித்து, தங்களுக்கு நிரந்தர பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதை அண்ணாமலை கண்டு கொள்ளாததால் அவர்கள் ‘அப்செட்’ ஆகினர்.

பின்னர், அதிமுக-பாஜ கூட்டணி முறிவுக்கு பாஜ மாநில தலைமைதான் (அண்ணாமலை) காரணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் முனுசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முறையாக பதில் அளிக்காமல், ‘‘நான் தற்போது பாதயாத்திரையிலேயே கவனம் செலுத்தி வருகிறேன்’’ என அரசியல் கேள்விகளை தவிர்த்து விட்டு, அங்கிருந்து நழுவிச்சென்றார்.

The post அதிமுகவுக்கு பதிலடி கொடுக்காமல் எஸ்கேப் அரசியல் கேள்விகளை தவிர்த்த ‘அரசியல்வாதி அண்ணாமலை’ appeared first on Dinakaran.

Related Stories: