‘வந்தே பாரத்’ ரயில் கதவை திறந்த ஊழியர்களால் சென்னை பயணி பலி: 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்

சேலம்: சேலத்தில் வந்தே பாரத் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்து பயணி உயிரிழந்த விவகாரத்தில், அவசர கதவை திறந்து வைத்த 2 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னை-கோவை இடையே சேலம் வழியே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 26ம் தேதி வந்த வந்தே பாரத் ரயிலில் சென்னை கீழ்கட்டளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் பவுலேஷ் (70), அவரது மனைவி ரோஸ் மார்க்ரேட் ஆகியோர் சி3 பெட்டியில் ஈரோட்டிற்கு பயணித்தனர். மாலை 6.05 மணிக்கு சேலத்திற்கு வந்த வந்தே பாரத் ரயில், 4வது பிளாட்பாரத்தில் நின்றது.

அப்போது இருக்கையில் இருந்து எழுந்த பவுலேஷ், ரயிலின் அவசர கதவு அருகே நின்றிருந்தார். அப்போது திடீரென கதவு திறக்கவும், மறுபுறத்தில் 5வது பிளாட்பாரம் தண்டவாளத்தில் பவுலேஷ் விழுந்தார். சுமார் 6 அடி உயரத்திற்கு மேல் இருந்து விழுந்ததால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் அவசர கதவின் பட்டனை யாரும் அழுத்தி திறக்காத நிலையில், அது எப்படி திறந்து பவுலேஷ் கீழே விழுந்தார் என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, நேரடியாக சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விசாரித்தார். பின்னர் அவர், கோவைக்கு புறப்பட்டுச் சென்று, விபத்து நிகழ்ந்த வந்தே பாரத் ரயிலின் சி3 பெட்டியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்.

அதில், சேலம் ரயில்வே ஸ்டேஷன் 4வது பிளாட்பாரத்தில் வந்தே பாரத் ரயில் வந்து நிற்கவும், 5வது பிளாட்பாரம் பகுதியில் இருந்த 2 ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பாதை வழியே இறங்கி வந்து ரயிலின் அவசர கதவின் பட்டனை அழுத்தி திறந்து, ரயிலில் ஏறி மறுமுனையில் 4வது பிளாட்பாரத்தில் இறங்கிச் சென்றது தெரியவந்தது. சிறிது நேரத்தில், அவசர கதவு பகுதிக்கு பவுலேஷ் சென்று கதவின் மீது கை வைக்கவும் அது திறந்து கீழே விழுந்து உயிரிழந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து கதவை திறந்து சென்றது சேலம் ரயில்வே ஸ்டேஷனில் பாயிண்ட்மேன்களாக பணியாற்றும் தாமரைச்செல்வன், ஒய்.எஸ்.மீனா எனத்தெரியவந்தது. அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா நேற்று உத்தரவிட்டார். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

The post ‘வந்தே பாரத்’ ரயில் கதவை திறந்த ஊழியர்களால் சென்னை பயணி பலி: 2 பேர் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: