சென்னை பல்லாவரம் அருகே கனமழையால் சோகம்… பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு..!!

சென்னை: பல்லாவரம் அருகே கனமழை காரணமாக பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார். பழைய பல்லாவரம் மலைமகள் தெரு, பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி சத்தியவாணி (55). கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான வீட்டின் மாடியில் கொட்டகை அமைத்து வசிக்கின்றனர். நேற்றிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை பெய்தது. சத்தியவாணியும், கன்னியப்பனும் ஒரு அறையில் தூங்கினர். பிள்ளைகள் வேறு ஒரு அறையில் தூங்கினர்.

நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக சத்தியவாணி வீட்டின் அருகே உள்ள ஒருவரது வீட்டின் சுவர்இடிந்து விழுந்தது. இதில் சத்தியவாணியின் வீடு உடைந்ததில் சத்தியவாணி உயிரிழந்தார். இதில் கணவர் தப்பினார். சத்தம் கேட்டு பிள்ளைகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து இடிபாடுகளை அகற்றினர். சத்தியவாணியின் உடலை பார்த்ததும் கதறினர். உடனடியாக பல்லாவரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சத்தியவாணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை பல்லாவரம் அருகே கனமழையால் சோகம்… பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: