திமுக பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது: 5 துப்பாக்கிகள் பறிமுதல்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் எம்எல்ஏ தியாகராஜன் மகன் தியாக இளையராஜா (46). திமுக பிரமுகரான இவர், மணவாளநல்லூரில் உள்ள தனது விவசாய நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். விருத்தாசலத்தில் வள்ளலார் குடில் என்ற முதியோர் மற்றும் சிறுவர் இல்லம் நடத்தி வருகிறார். அதே மணவாளநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் மகன் புகழேந்தி ராஜா(27), அதிமுக ஓபிஎஸ் அணியில் கடலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது சகோதரர் ஆடலரசு (25) இவர்களுக்கும் இளையராஜாவுக்கும் தேர்தல் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி மாலை இளையராஜாவை புகழேந்தி ராஜா, ஆடலரசு தலைமையிலான கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியது. படுகாயம் அடைந்த இளையராஜா சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய ஆடலரசு, புகழேந்தி ராஜா உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அழகேஸ்வரன், அன்பரசன், ரமேஷ், செந்தில்குமார் ஆகிய 4 பேரை இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post திமுக பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது: 5 துப்பாக்கிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: