அதேபோல திருவான்மியூர், வேளச்சேரி, வியாசர்பாடி, தலைமைச் செயலகம், விருகம்பாக்கம், காந்திநகர் பகுதிகளிலும் இந்த குறுங்காடுகள் மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் பல மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மியாவாக்கி முறையில் நடப்படும் மரக்கன்றுகள் வேகமாக வளர்ந்து 2 அல்லது 3 ஆண்டுகளில் குட்டி காடுகளாக மாறிவிடும். அதன்பின்னர் எந்த பராமரிப்பும் தேவைப்படாது. 2 ஆயிரம் மரங்களை வளர்த்தால் ஆண்டுக்கு 11 டன் கார்பன்- டை – ஆக்சைடை உட்கொண்டு, 4 டன் ஆக்சிஜனை வழங்கும். காற்றின் ஈரப்பதம் தக்க வைக்கப்படுவதால் மழைப்பொழிவும் அதிகரிக்கும். தவிர, இந்த மரங்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் கிடைப்பதுடன் பூமியின் வெப்பமும் வெகுவாகக் குறையும். ஏராளமான நுண்ணுயிர்கள், பறவைகள், புழு, பூச்சி பெருக்கமும் அதிகமாகும். மரங்கள் நெருக்கமாக இருப்பதால் ஒளிச்சேர்க்கைக்காக சூரிய ஒளியைத்தேடி ஒன்றுக்கொன்று வேகமாக போட்டிப்போட்டு வளர்கின்றன. அதனால் ஒரு மரத்தின் பத்து வருட வளர்ச்சி இரண்டு வருடத்திலேயே கிடைத்துவிடும்.
ஆழமான குழியில் செடியை நடவு செய்வதால், வேகமாக வேர் உள்ளே இறங்கிப் பிடித்துக்கொள்ளும். இந்த மரங்களுக்கு உரமாக இயற்கைக் கழிவுகள், வீட்டு சமையல் கழிவுகளைப் பயன்படுத்தினாலே போதும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் இது மாதிரியான திட்டங்கள் பயனளிக்கும். சென்னையில் மேலும், பசுமை பரப்பை அதிகரிக்க அதிகமான இடங்களை மாநகராட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களில் இதுவரை சென்னையில் மொத்தம் 38 மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 78126 சதுரமீட்டரில் 1,22,706 மரங்கள் நடப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 6 மாதங்களில் பல லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன. தற்போது சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை முழுவதும் மேலும் சில மியாவாக்கி காடுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் இதுபோன்ற குறுங்காடுகளை உருவாக்க எண்ணம் உள்ளவர்கள் மாநாகராட்சியிடம் தெரிவித்தால் அவர்களுக்கு உடனடியாக அமைத்து தர சென்னை மாநகராட்சி தயராக உள்ளது.
The post சென்னை மாநகராட்சி பகுதிகளில் 2 ஆண்டுகளில் 38 மியாவாக்கி காடுகள்: பசுமை பரப்பை அதிகரிக்க தீவிரம் appeared first on Dinakaran.