இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 2 ஆண்டுகளில் 1.7 லட்சம் பேருக்கு சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் ககன் தீப் சிங் தகவல்


சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான அவசர கால சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான இரண்டாம் ஆண்டிற்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த முதுநிலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் 260 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்கள் மற்றும் நல்வாழ்வு துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைது பேசுகையில், ‘தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவசரகால சிகிச்சை பிரிவு என்பது ஒரு தூண் போல திகழ்ந்து வருகிறது.

தமிழகத்தில் சாலை விபத்துகளில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் விதமாகதான் இன்னுயிர் காப்போம் திட்டம் தமிழக அரசால் தொடங்கபட்டது. இத்திட்டத்தின் மூலமாக கடந்த 2 ஆண்டுகளில் 5.7 சதவீதம் இறப்புகள் என்பது குறைந்துள்ளது. 1.7 லட்சம் சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலும் வெற்றிகரமாக அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தான் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை என்பது முதன்மை இடத்தில் அங்கம் வகித்து வருகிறது’ என்றார்.

நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வர் தேரணி ராஜன், துணை முதல்வர் கவிதா, சென்னை மருத்துவ கல்லூரி தலைவர் பவானி, அவசர சிகிச்சை பிரிவு துறையின் தலைவர் கௌதமி மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அவசர சிகிச்சை மருத்துவ சங்கத்தின் தலைவர் முகமது அனீஸ் கலந்து கொண்டனர்.

The post இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 2 ஆண்டுகளில் 1.7 லட்சம் பேருக்கு சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் ககன் தீப் சிங் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: