விருதுநகர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கரைக்கப்பட்டது தொடர்பாக எஸ்.பி. விளக்கம்..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டி அரசுப்பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கரைக்கப்பட்டது தொடர்பாக எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார். விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு கட்டுப்பட்டது சின்னமூப்பன்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் குடிநீருக்காகவும், சமையலுக்காகவும் குடிநீர் தொட்டியானது பள்ளிக்கு அருகில் உள்ளது. செப்டம்பர் 6ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என்பதால் பள்ளிக்கு விடுமுறை விடுபட்டிருந்தது. நேற்று ( செப்டம்பர் 7 ) காலை சிற்றுண்டி செய்வதற்காக முன்னிரவே சமையல் செய்யும் பெண்கள் சமையல் முன்னேற்பாடுகளை செய்ய பள்ளிக்கு சென்றுள்ளனர். அச்சமயம் குடிநீர் குழாயில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெண்கள் குடிநீர் தொட்டியை திறந்து பார்க்கையில் குடிநீர் தொட்டிக்குள் மாட்டு சாணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சமையலுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்தது யார்? என விசாரணை நடைபெற்று வந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறையினர் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, 2 சிறுவர்கள் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணத்தை கரைத்துவிட்டதாக விருதுநகர் எஸ்.பி. ஸ்ரீனிவாச பெருமாள் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்.4ம் தேதி இரவு மாட்டுச் சாணத்தை குடிநீர் தொட்டியில் கலந்து அசுத்தம் செய்துள்ளனர். குடிநீர் தொட்டியில் சிறுவர்கள் 2 பேர் விளையாட்டு தனமாக மாட்டுச்சாணத்தை கலந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. அசுத்தமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி, புதிதாக பாதுகாப்பான இடத்தில் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி. தெரிவித்தார்.

The post விருதுநகர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கரைக்கப்பட்டது தொடர்பாக எஸ்.பி. விளக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: