திருவள்ளூர் வேம்புலி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சீர்வரிசை கொண்டுவரும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் கிராம தேவதையாக இருக்கும் ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாகிய ஸ்ரீ வேம்புலி அம்மனுக்கு ஜாத்திரை உற்சவத்தை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 1ம் தேதி திருவிழா தொடங்கியது. அன்று அதிகாலை 2 மணியளவில் அம்மனுக்கு அபிஷேகமும், காலை சிம்ம லக்னத்தில் ஸ்ரீ வேம்புலி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை அம்மன் புறப்பாடும், புடவை சாற்றுதல், புஷ்ப சாத்துப்படி, பந்தல் அமைப்பு பணிகளும், கிராம வேலை ஆட்களுக்கு மரியாதை துணி வழங்கும் நிகழ்ச்சியும், முன்வாசல் முகப்பு புஷ்ப அலங்காரமும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 2ம் தேதி முதல் காலை நேரத்தில் அபிஷேகம் மற்றும் புஷ்பலங்காரமும், 5ம் நாளான நேற்று மாலை கோல(ம்) கொண்ட அம்மன் சேவா டிரஸ்ட் சக்திகள் சார்பில் கோல(ம்) கொண்ட அம்மன் கோயிலில் இருந்து ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலுக்கு சீர்வரிசையை முகமது அலி தெரு, பஜார் வீதி, வடக்கு ராஜ வீதி, காக்களூர் சாலை வழியாக கொண்டு வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் 9ம் தேதி வரை காலை நேரங்களில் அபிஷேகமும், புஷ்பலங்காரமும் நடைபெறுகிறது.

பிறகு 7ம் தேதி இரவு 9 மணிக்கு நாடக நிகழ்ச்சியும், 8ம் தேதி நாத சங்கமம் நிகழ்ச்சியும், 9ம் தேதி இரவு 9 மணிக்கு பால் கும்பம் நிகழ்ச்சியும், 11 மணிக்கு நாடகமும் நடைபெறுகிறது. ஜாத்திரை உற்சவத்தின் இறுதி நாளான 10ம் தேதி காலை 7 மணிக்கு அபிஷேகம் மற்றும் புஷ்பலங்காரமும், இரவு அம்மன் வீதி புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருவிழாக்குழு, வேம்புலி அம்மன் சேவா சங்கம், கிராமத்தார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.

The post திருவள்ளூர் வேம்புலி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சீர்வரிசை கொண்டுவரும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: