மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

குன்றத்தூர்: சென்னை அருகே மாங்காட்டில் உள்ள காமாட்சியம்மன் கோயிலின் உப கோயிலான வெள்ளீஸ்வரர் கோயில், தொண்டை மண்டல நவக்கிரக ஸ்தலங்களில் புதனுக்குரிய சுக்கிரன் பரிகார ஸ்தலமாகும். இக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக கோயில் பிரகாரத்தை சுற்றிலும் ₹40 லட்சம் மதிப்பில் கருங்கல் தரை அமைக்கப்பட்டது. கோயிலின் அனைத்து விமானங்களும், பரிவார சன்னதிகளும் ₹30 லட்சம் மதிப்பில் வண்ணம் தீட்டப்பட்டு, சமீபத்தில் அனைத்து திருப்பணிகளும் நிறைவு பெற்றன.

இதைத் தொடர்ந்து, வெள்ளீஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் நான்கு கால பூஜைகளுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரானது கோயில் பிரதான கோபுர விமானத்தின்மீது அமைக்கப்பட்டிருந்த கலசத்தின்மீது புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும், கோயில் வளாகத்தில் அமைந்துள்ள உப சன்னதி கோபுர கலசங்களிலும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

பின்னர், அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்மீது சிவாச்சாரியார்கள் புனிதநீரை தெளித்தனர். பின்னர் வெள்ளீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளில் மாங்காடு போலீசார் ஈடுபட்டனர்.

The post மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: