காஞ்சிபுரத்தில் அஞ்சல்துறை சார்பில் மின் வணிகம், அஞ்சலக ஏற்றுமதி மையம் குறித்த விளக்க கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அஞ்சல்துறை சார்பில் மின் வணிகம் மற்றும் அஞ்சலக ஏற்றுமதி மையம் தொடங்கியிருப்பது குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அஞ்சல்துறை சார்பில் மின் வணிகம் மற்றும் அஞ்சலக ஏற்றுமதி மையம் தொடங்கியிருப்பது குறித்த விளக்க கூட்டம் சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அஞ்சல்துறையின் வெளிநாட்டு வர்த்தகப்பிரிவு இயக்குநர் ராஜலட்சுமி தேவராஜ், கைத்தறி ஏற்றுமதி மற்றும் ஊக்குவிப்பு கவுன்சில் நிர்வாக இயக்குநர் என்.ஸ்ரீதர், காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவின் செயல் இயக்குநர் வி.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அஞ்சல்துறை சென்னை மண்டல இயக்குநர் சோமசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். அஞ்சல்துறை தலைவர் பி.பி.ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென்கொரியாவுக்கு வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பிய பார்சலை பெற்றுக்கொண்டு அதற்குரிய ரசீது வழங்கினார். இந்த நிகழ்வில் சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன் பேசியதாவது, தமிழகத்தில் 50 நகரங்களில் அஞ்சல்துறை ஏற்றுமதி மையங்களை தொடங்கியிருக்கிறது. ஏற்றுமதியாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தபடியே 219 நாடுகளுக்கு பொருட்களை அஞ்சல்துறை மூலம் ஏற்றுமதி செய்யலாம்.

இருப்பிடத்திற்கே வந்து பார்சல்களை பெற்றுக் கொண்டும், தேவைப்பட்டால் பேக்கிங் செய்து கொடுத்தும் பார்சல்களை ஏற்றுமதி செய்யலாம். இதற்காக பிற நிறுவனங்களை விட குறைந்த கட்டணமே பெறப்படுகிறது. சின்னஞ்சிறு ஏற்றுமதியாளர்களும், தனி நபர்களும் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து விபரங்களும் அஞ்சல்துறை மூலம் வழிகாட்டவும் ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

எந்தவொரு வணிகரும் சர்வதேச வர்த்தகத்தின் சிக்கல்களை எளிதில் எதிர்கொள்ள வாய்ப்பளிக்கவும், ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையிலும் ஏற்றுமதி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மைய உதவி இயக்குநர் ஆர்.சசிகலா, கைத்தறி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் இணை இயக்குநர் சுந்தர் முருகேசன் உட்பட 76 ஏற்றுமதியாளர்களும் கலந்து கொண்டனர். நிறைவாக அஞ்சல்துறை காஞ்சிபுரம் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா நன்றி கூறினார்.

The post காஞ்சிபுரத்தில் அஞ்சல்துறை சார்பில் மின் வணிகம், அஞ்சலக ஏற்றுமதி மையம் குறித்த விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: