திருவனந்தபுரம்: கேரளாவில் 3 பெண்கள் உள்பட 11 மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளுடன் ஊர்வலம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது கீழ்ப்பள்ளி. இது ஒரு மலையோர கிராமமாகும். இந்த கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அடிக்கடி இங்கு மாவோயிஸ்டுகள் ஆயுதங்களுடன் வந்து உணவு மற்றும் பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை இங்குள்ள அய்யன்குன்னு பகுதியில் திடீரென மாவோயிஸ்டுகள் வந்தனர். 11 பேர் அடங்கிய அந்தக் குழுவில் 3 பெண்களும் இருந்தனர். இவர்கள் துப்பாக்கிகளுடன் திடீரென்று அப்பகுதியில் ஊர்வலம் நடத்தினர். அப்போது அவர்கள் கேரள மற்றும் ஒன்றிய அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் இந்த பேரணி நடைபெற்றது. இதையடுத்து மாவோயிஸ்டுகள் அனைவரும் வனப்பகுதிக்குள் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதேபோல் கடந்த மாதம் 24ம் தேதி கண்ணூர் அருகே அய்யன்குன்னு பகுதியில் 5 மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் ஊர்வலம் சென்றனர். மேலும் கேரள அரசுக்கு எதிராக அவர்கள் நோட்டீசுகளையும் பொதுமக்களிடம் வினியோகம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளுடன் ஊர்வலம் appeared first on Dinakaran.
