உத்திரமேரூர் அருகே திரிசூல காளியம்மன் கோயில் தீமிதி திருவிழா

உத்திரமேரூர்: திருப்புலிவனம் கிராமத்தில் ஸ்ரீ திரிசூல காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடந்தது. உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் ஸ்ரீ திரிசூல காளியம்மன் கோயிலில் 39ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று முன்தினம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதான அம்மனுக்கு அபிஷேக ஆராதனை முடிந்தபின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், விரதமிருந்த பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி யாக பூஜைகள் நடைப்பெற்றது.

மேலும், 1008 பெண்கள் கலந்து கொண்டு மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், லட்சுமி பாக்கியம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கவும், மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து, பக்தர்கள் வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை சுற்றி அம்மனை வழிபட்டும், கோயில் வளாகத்தில் ஊரணிப் பொங்கலிட்டும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். அதன்பின் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் மாலை விரதமிருந்த பக்தர்கள் திருப்புலிவனம் குளக்கரையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து தீமிதித்து அம்மனை வழிபட்டனர்.

நிகழ்ச்சியினையொட்டி கோயில் வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட திரிசூல காளியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி உட்பட விழா குழுவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post உத்திரமேரூர் அருகே திரிசூல காளியம்மன் கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: