சந்துகடையில் மது விற்பனை புகாரளித்த பெண் வீட்டுக்கு நள்ளிரவில் பில்லி, சூனியம்-வீடியோ காட்சிகள் வைரலால் பரபரப்பு

பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டியில் சந்துக்கடை மது விற்பனை குறித்து புகாரளித்த பெண்ணின் வீட்டிற்கு, சந்துக்கடை வியாபாரிகள் சூனியம் செய்வதாக வலம் வரும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது.தர்மபுரி மாவட்டம் பொம்மிடி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பையர்நத்தம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. டாஸ்மாக்கில் பார் வசதி இல்லாத நிலையில் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகள், சிக்கன் கடைகள் மற்றும் ரோட்டோரம் அமர்ந்து குடிமகன்கள் மது குடித்துச் செல்கின்றனர்.

இரவு 10 முதல் மறுநாள் பகல் 12 மணி வரை டாஸ்மாக் கடை இல்லாததை பயன்படுத்தி சிலர் அப்பகுதியில் சந்துகடைகள் மூலம், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்கின்றனர். இதனால், 24 மணிநேரமும் இப்பகுதியில் மது விற்பனை நடப்பதால், அப்பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு பதிலாக புகார் செய்தவரின் பெயர் போலீசார் மூலம் சந்து கடைகாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விடுகிறது. இதனால் போலீசில் புகார் கூறவே பெண்கள் தயங்குகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், பையர்நத்தம் ஒயின் ஷாப் அருகில் சிலர் சந்து கடை நடத்துகின்றனர். நாள்தோறும் சந்து கடையில் குடித்து விட்டு குடிமகன்கள் தொந்தரவு செய்கின்றனர். போலீசில் புகாரளித்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. புகார் செய்த எங்கள் வீட்டிற்கு சந்து கடை வியாபாரிகள் நள்ளிரவில் வந்து பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றை செய்து வீட்டின் முன் திருநீறு தெளித்து விட்டு செல்கின்றனர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சந்து கடைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றனர்.பில்லி சூனியம் செய்து திருநீறு வீசிச் செல்லும் சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சந்துகடையில் மது விற்பனை புகாரளித்த பெண் வீட்டுக்கு நள்ளிரவில் பில்லி, சூனியம்-வீடியோ காட்சிகள் வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: