கிண்டி கத்திப்பாரா சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால் கிண்டியில் இருந்து வடபழனி, கோயம்பேடு சென்ற வாகனங்கள் தண்ணீரில் மிதந்து சென்றன. வயதான தம்பதியை அழைத்து சென்ற கார் ஒன்று கத்திப்பாரா சுரங்கப்பாதை தண்ணீரில் சிக்கி பழுதாகி நின்றது. தொடர்ந்து வந்த ஆட்டோ உள்ளிட்ட அடுத்தடுத்த வாகனங்களும் வெள்ளத்தில் சிக்கி கொண்டன. இதை அடுத்து பொதுமக்கள் உதவியோடு வாகனங்கள் அப்புறப்படுத்தபட்டன.
கத்திப்பாரா சுரங்கப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி மின்மோட்டார் செயல்படாததே மழை நீர் தேங்க காரணம் என்று கூறப்படுகிறது. வேளச்சேரி, கன்னிகாபுரம், மடுவாங்கரை பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது. வேளச்சேரியிலிருந்து கிண்டி செல்லும் ரேஸ் கோர்ஸ் சாலையை மழை நீர் மூழ்கடித்தது. சாலையே தெரியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றன.
விட்டு விட்டு மழை நீடித்ததால் கோடம்பாக்கம், அபிராமிபுரம், வளசரவாக்கம், கே.கே நகர் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் சில நாட்களாக சுட்டெரித்த கோடை வெயிலில் சிக்கி தவித்த சென்னை மக்கள் இந்த மழையை வரவேற்றனர். சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் இரண்டாவது நாளாக மழை கொட்டியது. இதனால் ஜி.எஸ்.டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்தது. மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளுமையான சூழல் நிலவுகிறது.
The post கத்திப்பாரா சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய நீரில் மிதந்து சென்ற வாகனங்கள்..!! appeared first on Dinakaran.