நள்ளிரவில் பிறந்த நாள் வாழ்த்து கூற வந்தபோது கண்முன் காதலன் கொலை துக்கத்தில் காதலி தற்கொலை: விஷம் குடித்தும் உயிர் பிழைத்ததால் தூக்கில் தொங்கினார்

மதுக்கரை: கோவையில் பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த காதலன், கண்முன் கொலை செய்யப்பட்டதால் விரக்தி அடைந்த காதலி, தூக்கிட்டு தற்ெகாலை செய்து கொண்டார். கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரசாந்த் (21). தனியார் நிறுவன லோடுமேன். இவர், செட்டிபாளையம் வசந்தம் நகரை சேர்ந்த தன்யா (19) என்ற இளம்பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்துள்ளார். முதலில் எதிர்ப்பு தெரிவித்த இரு வீட்டாரும், பின்னர் அடுத்த ஆண்டு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். கடந்த 5ம் தேதி தன்யாவின் பிறந்த நாள் என்பதால், 4ம் தேதி நள்ளிரவில் வாழ்த்து சொல்வதற்காக பிரசாந்த் தனது நண்பர்களுடன் பைக்கில் அவரது வீட்டிற்கு சென்றார். சரியாக 12 மணியளவில் தன்யாவின் வீட்டுக் கதவை பிரசாந்த் தட்டிய போது, தாய்மாமனான டாக்சி டிரைவர் விக்னேஷ் (29), தன்யாவின் தந்தை மகாதேவன் (40) ஆகியோர் கதவை திறந்துள்ளனர். குடிபோதையில் இருந்த பிரசாந்துக்கும் விக்னேஷுக்கும் தகராறு ஏற்படவே, முதலில் பிரசாந்த் விக்னேஷை கட்டையால் தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த விக்னேஷ் கத்தியை எடுத்து பிரசாந்தை குத்தியுள்ளார். இதில் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விக்னேஷை கைது செய்தனர். பிறந்த நாள் வாழ்த்து கூற வந்த காதலன் தன் கண்முன் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த தன்யா யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். கடந்த 6ம் தேதி இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை பெற்றோர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 2 நாள் சிகிச்சைக்குப்பின் அவரை பெற்றோர் நேற்று முன்தினம் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், மகளுக்கு துணையாக பாட்டியை வைத்து விட்டு வேலை விஷயமாக தாய், தந்தை இருவரும் நேற்று முன்தினம் வெளியே சென்றிருந்தனர். வயிற்று வலிக்கு மாத்திரை வாங்கி வரும்படி பாட்டியை அனுப்பிவிட்டு தன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்யாவின் தம்பி கடந்த ஓராண்டுக்கு முன்பு திருநங்கையாக மாறியதாக கூறப்படுகிறது. காதலன் கண்முன் கொலை செய்யப்பட்டதால் காதலி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post நள்ளிரவில் பிறந்த நாள் வாழ்த்து கூற வந்தபோது கண்முன் காதலன் கொலை துக்கத்தில் காதலி தற்கொலை: விஷம் குடித்தும் உயிர் பிழைத்ததால் தூக்கில் தொங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: