அமித்ஷா, அண்ணாமலை பேனர் அகற்றம் நகராட்சி அலுவலகத்தில் புகுந்து அதிகாரிகளுக்கு பாஜ மிரட்டல்: பெண்கள் அலறியடித்து ஓட்டம்

தமிழகத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைத்தால் அதிகபட்சமாக மூன்றாண்டு சிறைத் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் வரை விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் வேலூர் பொதுக்கூட்டத்தில் இன்று பங்ேகற்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வருகை தர உள்ளனர். இவர்களை வரவேற்று குடியாத்தம் நகரத்தில் நகராட்சி, நெடுஞ்சாலை துறை, போலீசார் அனுமதி இல்லாமல் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக ஆபத்தான முறையில் 2 பெரிய கட்அவுட் பேனர்கள் பாஜவினர் வைத்தனர்.

இதனை அறிந்த நகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பேனரை அகற்றினர். இதையடுத்து குடியாத்தம் நகர பாஜ தலைவர் சாய்ஆனந்த் தலைமையிலான 25க்கும் மேற்பட்ட பாஜவினர் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து பணியாளர்களிடம் எதற்காக பேனர்களை அகற்றினீர்கள் என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அலுவலகத்தில் இருந்த பெண் ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நகராட்சி நிர்வாகத்தினர் புகாரின்படி குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அமித்ஷா, அண்ணாமலை பேனர் அகற்றம் நகராட்சி அலுவலகத்தில் புகுந்து அதிகாரிகளுக்கு பாஜ மிரட்டல்: பெண்கள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: