சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் கட்டாயம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ‘சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் கட்டாயம்’ என டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரை சேர்ந்த அமுதவாணன், சிவகங்கையை சேர்ந்த இளங்கோவன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஊரக வளர்ச்சித்துறையில் காலியாகவுள்ள 761 சாலை ஆய்வாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜன.13ல் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து கட்டாயம் ஐடிஐ படித்திருக்க வேண்டும். ஆனால், டிப்ளமோ முடித்தவர்கள், சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது விதிகளுக்கு முரணானது.

இதனால் ஐடிஐ மட்டும் முடித்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, சாலை ஆய்வாளர்களாக டிப்ளமோ மற்றும் சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்களை நியமிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் பெறாமல் நேரடியாக டிப்ளமோ மற்றும் சிவில் இன்ஜியரிங் படித்தவர்களை பரிசீலிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. உயர் கல்வித்தகுதி உடையவர்கள் நியமன நடைமுறையில் பங்கேற்பது என்பது விதிக்கு மாறானது.

அரசாணைப்படி, நேரடி நியமனமான சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ (சிவில் வரைவாளர்) சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும். ஐடிஐ படிப்போடு டிப்ளமோ மற்றும் சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை இருக்கலாம். முன்னுரிமை என்பது ஒரே தகுதியுடைய ஒன்றுக்கு மேற்பட்டோர் இருக்கும்போது, டிப்ளமோ, சிவில் இன்ஜினியரிங் முடித்தவரால் முன்னுரிமை பெற முடியும்.

ஆனால், இவர்கள் முதலில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இது அத்தியாவசிய தகுதியாகும். இந்த விவகாரத்தில் தெளிவான முரண்பாடு உள்ளது. சிறப்பு விதிகள் ஐடிஐ சான்றிதழ் இருக்க வேண்டும் என்கிறது. எனவே, சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்களையே தகுதியாக கருத வேண்டும். மனுதாரர்கள் இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் என்பதால் இந்த மனு ஏற்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

The post சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் கட்டாயம்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: