வருசநாடு மூல வைகை ஆற்றில் சேதமடைந்த தடுப்பணைகள் சீரமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

வருசநாடு: வருசநாடு பகுதி மூல வைகை ஆற்றில் சேதமடைந்த நிலையில் உள்ள தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. அதனால், தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும்.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை மற்றும் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு காலங்களில் தேனி மாவட்டத்தில் உள்ள நதிகள், குளங்களில் நீர்வரத்து அதிகரிமாக இருக்கும். கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் வேளாண்மை மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

நீர்நிலைகளை தூர்வாருதல், போதிய தடுப்பணைகள் அமைத்தல் மற்றும் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன. இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகையாற்றின் குறுக்கே 3க்கு மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் வருசநாடு பகுதியில் உள்ள தடுப்பணை கட்டப்பட்டது முதல் அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் தடுப்பணை சிறிது சிறிதாக சேதமடைய தொடங்கியது.

தடுப்பணை சேதம் அடைவதை தடுக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்போது தடுப்பணை முற்றிலுமாக சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது இந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, இந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வருசநாட்டை சமூக ஆர்வலர் வேல்முருகன் கூறுகையில், ‘‘தடுப்பணைணை சீரமைத்தால் தான் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் ஆற்றங்கரையோரம் மண் அரிப்பு ஏற்படாது. எனவே விரைவில் தடுப்பணையை சீரமைக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.வருசநாடு விவசாயிகள் கூறுகையில், ‘‘தடுப்பணையை சீரமைப்பது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.இதுகுறித்து ஆண்டிபட்டி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கடமலை மயிலை ஒன்றியத்தில் பல இடங்களில் தடுப்பணை சீரமைப்பு பணிகள் விரைவில் நடைபெறும்’’ எனத் தெரிவித்தனர்.

The post வருசநாடு மூல வைகை ஆற்றில் சேதமடைந்த தடுப்பணைகள் சீரமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: