முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதன் பேரில் சென்னை-மதுரை வந்தே பாரத் ரயில்: செப்டம்பரில் அறிமுகம்

சென்னை: சென்னை-மதுரை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில் அறிமுகமாகி இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 18க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி,சென்னை-கோவை,சென்னை-மைசூரு இடையே இயக்கப்படுகிறது. இந்நிலையில்,சென்னை-மதுரை வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், மதுரையில் தொழில் வளர்ச்சியை பெருக்கிட வந்தே பாரத் போன்ற அதிவிரைவு ரயிலை இயக்க வேண்டும் என தொழிற்சங்கங்களும் வலியுறுத்தின. இதனிடையே
கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி சென்னை வந்தார். அப்போது முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை- மதுரை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனையடுத்து, அதற்கான பணிகளை தற்போது தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரி தெரிவித்ததாவது: சென்னை-மதுரை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ரயில்வே சிக்னலிங், தண்டவாள சீரமைப்பு, மற்றும் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் போன்றவை நடைப்பெற்று வருகிறது. இந்த வந்தே பாரத் ரயிலும் 8 பெட்டிகள் கொண்ட ரயிலாகும். இதே போல்,நெல்லை, கன்னியாகுமரி போன்ற தொலை தூர இடங்களுக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க சாத்தியம் கிடையாது, பயணிகள் அவ்வளவு நேரம் உட்கார்ந்து பயணம் செய்ய முடியாது, நெல்லை மற்றும் கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டுமானால் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் தான் சாத்தியம்.

தற்போது சென்னை-மதுரை இடையே ஒரு நாளைக்கு 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் மதுரை செல்ல 7 மணி 40 நிமிடங்கள் ஆகிறது. தேஜஸ் ரயிலை தவிர, ஆக இந்த பகுதிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் 5 முதல் 6 மணி நேரத்தில் மதுரைக்கு செல்லலாம். ஏற்கனவே சென்னை-கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, அது போல் சென்னை-மதுரை இடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். இந்த ரயில் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதன் பேரில் சென்னை-மதுரை வந்தே பாரத் ரயில்: செப்டம்பரில் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: