ரேஷன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் கலெக்டர் தகவல் வேலூர் மாவட்டத்தில் நாளை

வேலூர், ஜூன் 9: வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நாளை நடக்க உள்ளதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் மாதத்தின் 2வது சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி நாளை 10ம் தேதி வேலூர் தாலுகாவில் நெல்வாய் கிராமத்திலும், அணைக்கட்டு தாலுகாவில் அத்தியூர் குருமலை கிராமத்திலும், காட்பாடி தாலுகாவில் மேல்பாடி கே.ஆர்.நகரிலும், குடியாத்தம் தாலுகாவில் மேற்கு சைனகுண்டாவிலும், கே.வி.குப்பம் தாலுகாவில் பனமடங்கி கிராமத்திலும், பேர்ணாம்பட்டு தாலுகாவில் குண்டலப்பள்ளியிலும் நடக்கிறது.

இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொது விநியோகத்திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் இம்முகாமில் அலுவலர்களிடம் தெரிவித்து பரிகாரம் காணலாம். எனவே, பொதுமக்கள் நலன் கருதி கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெறும் சிறப்பு குறைதீர்வு முகாமில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் ஒளி நகலுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

The post ரேஷன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் கலெக்டர் தகவல் வேலூர் மாவட்டத்தில் நாளை appeared first on Dinakaran.

Related Stories: