தொடர் விபத்துகளால் சேதமடையும் சென்டர் மீடியன்களை மாற்றியமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி பகுதியில் லாரிகள் மோதி சேதமடைந்து கிடக்கும் சென்டர் மீடியனை மாற்றியமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் தண்டலம், சூளைமேனி, பெரியபாளையம் ஆகிய கிராமங்களின் சாலையின் நடுவே சென்டர் மீடியன் உள்ளது. இந்த சென்டர் மீடியன்களில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை வரும் சரக்கு வாகனங்கள், லாரிகள், ஆந்திர மாநில பஸ்கள் இரவு நேரத்தில் மோதி விடுகிறது இதனால் அந்த சென்டர் மீடியன் சேதமடைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ஜல்லி கற்கள் ஏற்றிய லாரி சூளைமேனி பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது. இதில் டிரைவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும், இதே போல் பெரியபாளையம், தண்டலம் பகுதிகளில் வாகனங்கள் மோதி சென்டர் மீடியன்கள் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த இந்த சென்டர் மீடியன்களை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பெரியபாளையம், தண்டலம், சூளைமேனி பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் வெளிமாநில, வெளிமாவட்டங்களில் இருந்து வரும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி வந்தது. இதை தடுப்பதற்காக நெடுஞ்சாலை துறையினர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்டர் மீடியன்கள் அமைத்தும், அதன் முன்பாக 10க்கும் மேற்பட்ட தூண்கள் அமைத்து, அதற்கு கறுப்பு – வெள்ளையில் வர்ணம் தீட்டி, அதன் முன்பாக ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தனர். ஆனால் அதுவும் அடுத்தடுத்து நடந்த லாரி விபத்துக்களில் உடைந்துவிட்டது. இந்நிலையில், இந்தப்பகுதி சென்டர் மீடியன் முன்பு பேரல் வைக்கப்பட்டது.

இதையும் மீறி வெளிமாநில லாரிகள் புதிதாக போடப்பட்ட பேரல்களையும் உடைத்துக்கொண்டு சென்டர் மீடியன் மீது மோதியது. இந்த சென்டர் மீடியன் ஊருக்கு வெளியேதான் போடப்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் பெரியபாளையம், தண்டலம், சூளைமேனி, பஜார் பகுதியை அகலப்படுத்தி ஊருக்கு நடுவிலும் சென்டர் மீடியன் அமைத்தால் இது போன்ற விபத்துக்கள் நடைபெறாது என தெரிவித்தனர். மேலும் இதுவரை இங்கு 20க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றனர்.

The post தொடர் விபத்துகளால் சேதமடையும் சென்டர் மீடியன்களை மாற்றியமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: