பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின கல்லூரி மாணவர்கள் அரசு விடுதிகளில் தங்கி பயில ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசால் சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்ளுக்கென மொத்தம் 17 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 17 கல்லூரி விடுதிகளில் 11 மாணவர்களுக்கானது. 6 மாணவியர்களுக்கானது. கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேர தகுதியுடையவர்கள். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கு உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படும். விடுதிகளில் சேர பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாணவ, மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின கல்லூரி மாணவர்கள் அரசு விடுதிகளில் தங்கி பயில ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: