நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3000 தர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசை ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், நடப்பாண்டில் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.143 உயர்த்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி சாதாரண வகை நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2183 ஆகவும், சன்ன வகை நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2203 ஆகவும் உயர்ந்துள்ளன.

நெல்லுக்கான கொள்முதல் விலை கடந்த ஆண்டு குவிண்டாலுக்கு ரூ.100 மட்டுமே உயர்த்தப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ரூ.143 உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது தான் என்றாலும், இந்த விலை உயர்வு உழவர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பைக் கூட நிறைவேற்றவில்லை. ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.3000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கை. எனவே, நெல்லுக்கான கொள்முதல் விலையை ஒன்றிய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். நெல் உற்பத்திக்காக செலவுகளை கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக நிர்ணயிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3000 தர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: