சுகாதார துறையில் காலியாக உள்ள 800 டிரைவர் பணியிடங்களை நிரப்ப உயர் நீதிமன்றம் தடை

சென்னை: சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 800 டிரைவர்கள் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதார துறையில் தற்காலிக அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு முன் ஆம்புலன்ஸ் டிரைவர்களாக நியமிக்கப்பட்ட 65 பேர், பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், கொரோனா பேரிடர் காலங்களில் பணியாற்றிய சுகாதார பராமரிப்பு பணியாளர்களின் நலன்களை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணி நிரந்தரம் வழங்கும் போது, முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பணி நிரந்தரம் கோரி அளித்த விண்ணப்பங்கள் மீது அரசு எந்த முடிவும் எடுக்காமல், பணி நிரந்தரம் செய்ய மறுத்து வருகிறது.

மேலும் காலியாக உள்ள 800 டிரைவர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, எங்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல், டிரைவர் பணி காலியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் எஸ்.தங்கசிவன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 800 டிரைவர் பணியிடங்களை நிரப்பவும், தற்காலிக ஆம்புலன்ஸ் டிரைவர்களை பணி நீக்கம் செய்யவும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post சுகாதார துறையில் காலியாக உள்ள 800 டிரைவர் பணியிடங்களை நிரப்ப உயர் நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Related Stories: