அனைத்து துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு கம்பீரமாக நிற்கிறது: ரூ.762.30 கோடியில் கட்டப்பட்ட 4.0 தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: யார் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யார் மறைத்தாலும் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக, கம்பீரமாக இன்றைக்கு நின்று கொண்டு இருக்கிறது என்று 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0, தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பேசியதாவது: யார் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யார் மறைத்தாலும் தமிழ்நாடு என்பது அனைத்து துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக, தலை நிமிர்ந்து, ஏன் கம்பீரமாக இன்றைக்கு நின்று கொண்டு இருக்கிறது. அனைத்து தொழில்களிலும் சிறந்த மாநிலமாக விளங்கும் நம்முடைய தமிழ்நாடு, தொழிற்சாலைகள் நிறைந்த பல்வகை பொருளாதாரத்துடன் கூடிய மாநிலம். ஆட்டோமொபைல், மின்னணு சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள், நிதி சேவைகள், பொறியியல், டெக்ஸ்டைல்ஸ், ஆடைகள் உற்பத்தி, பிளாஸ்டிக் மற்றும் ரசாயன உற்பத்தி ஆகிய துறைகளிலும் தமிழ்நாடு இப்போது முன்னணியில் உள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட தொழில்துறை ஆண்டறிக்கையின்படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் தொழிற்சாலைகளும், அதில் பணிபுரியும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது. விண்வெளி மற்றும் பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழிமுறைகள், மின்னணு வடிவமைப்பு, மருத்துவ மின்னணு சாதனங்கள் மற்றும் மின்சார பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு அபரிவிதமான வளர்ச்சியை கண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் மூலமாக உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகுக்கின்றன.

தமிழ்நாடு அரசின் கைடன்ஸ் தமிழ்நாடு அலுவலகத்தின் மூலமாக ஜனவரி 2022 முதல் மே 2023 வரை 110 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 279 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டு 1 லட்சத்து 96 ஆயிரத்து 596 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. 2021 – 2022ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்து 613 ஆகவும்; உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 393 ஆகவும் இருந்தது. நம்முடைய அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலமாக, 2022-2023ம் ஆண்டில் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 296 ஆகவும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 47 லட்சத்து 14 ஆயிரத்து 148 ஆகவும் உயர்ந்துள்ளது.

எனது கனவுத் திட்டங்களில் ஒன்று, நான் முதல்வன் திட்டம். மாநிலத்தின் முதன்மை திறன் மேம்பாட்டுத் திட்டமான “நான் முதல்வன்”, திட்டம் தொடங்கப்பட்டதன் வாயிலாக தொழிற்சாலைகளுக்கு தேவையான வருங்கால பணியாளர் தேவை வளத்தை மேம்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது.தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை 2 ஆயிரத்து 877 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த விரைந்து செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இத்தகைய தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில், முதற்கட்டமாக 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மையங்களை இன்று துவக்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக டாடா குழுமத்தினருக்கு எனது பாராட்டுகள். இதன்மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்து 140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடைய போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்து 40 மாணவர்கள் தொழில் 4.0 தரத்திலான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவார்கள். இதுபோன்ற நவீன தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெறுவோருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும். இந்த சிறப்புமிக்க நிகழ்வு இந்த அரசின் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்.

அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மட்டுமல்லாமல் இதர பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்தோரும் இங்கு குறுகிய கால பயிற்சிகளில் சேரலாம். எல்லார்க்கும் எல்லாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து திறமைகளையும் கொண்டவர்களாக மாணவர்களை, இளைஞர்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டு இளைய சக்தியை உலக நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நோக்கத்துடன்தான் பல்வேறு திட்டங்களை நாங்கள் தீட்டி வருகிறோம். டாடா போன்ற நிறுவனங்கள் தொழில் உற்பத்தியை மட்டுமல்ல, மனித ஆற்றலை உற்பத்தி செய்து பெருக்கும் நிறுவனங்களாகச் செயல்பட வேண்டும். அனைவருக்கும் திறமை வளர்ப்பதற்கான ஒரே மாதிரியான வாய்ப்பை தமிழ்நாடு அரசு வழங்கும். எங்களது எண்ணத்திற்கு வலுசேர்த்து உதவ அனைத்து நிறுவனங்களும் முன்வர வேண்டும் என்றார். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, செல்வம், எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, உயரதிகாரிகள் முகமது நசிமுதீன், வீரராகவ ராவ், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் வாரன் ஹாரிஸ், மனிதவள நிறுவனத்தின் மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டு இளைய சக்தியை உலக நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நோக்கத்துடன்தான் பல்வேறு திட்டங்களை நாங்கள் தீட்டி வருகிறோம்.

The post அனைத்து துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு கம்பீரமாக நிற்கிறது: ரூ.762.30 கோடியில் கட்டப்பட்ட 4.0 தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: