மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம்

ஊட்டி:

மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. மேட்டுபாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணிக்க பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுகின்றனர். நீலகிரி மலை ரயில் யுனெஸ்கோ அமைப்பின் மூலம் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

குன்னூர்-மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் குன்னூர் முதல் கல்லார் வரை ரயிலின் பாதுகாப்பிற்காக பினியன் சிஸ்டம் என்று கூறப்படும் பல் சக்கர தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்டவாளத்தில் பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் நீராவி என்ஜின் மூலம் 4 பெட்டிகளுடன் மலை ரயில் இயக்கப்படுகிறது. நடப்பு கோடை சீசனின் போது ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணித்து மகிழ்ந்தனர். தற்போதும் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில், ஊட்டி-குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் நீலகிரி மலை ரயில் மேம்பாட்டுக்காக ரயில்வே அமைச்சகம் உத்தரவின் பேரில் ரயில் வாரியம் நிதி ஒதுக்கி பர்னஸ் ஆயில் மற்றும் டீசல் என இரு புதிய என்ஜின்கள் தயாரிக்கப்பட்டன. 28 ரயில் பெட்டிகள் கடந்த ஓராண்டிற்கு முன்பு தயாரிக்கப்பட்டன.

இவற்றில் மலை ரயில் என்ஜின்கள் சோதனை ஓட்டம் நிறைவடைந்தது. ரயில் பெட்டிகளுக்கான வெள்ளோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பல்சக்கரத்தில் இயங்கும் மலை ரயிலுக்கான 4 புதிய பெட்டிகளின் சோதனை ஓட்டம் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. வெள்ளோட்டத்தின் போது பெட்டிகளின் இயக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்த பொறியாளர்கள் பெட்டியின் எடைக்கு ஏற்றவாறு பல்சக்கரத்தில் பெட்டிகள் இயங்கும் விதம் குறித்தும் ஆய்வு செய்தனர். விரைவில் இந்த பெட்டிகள் குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே சுற்றுலா பயணிகளுக்காக பயன்பாட்டுக்கு வர உள்ளது.

The post மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: