‘நூறு ஆண்டு காலம் வாழ்க’ 98 வயது தங்கைக்கு ‘பர்த்டே’ 105 வயது அக்கா வாழ்த்து: 4 தலைமுறையினர் பங்கேற்பு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே 98 வயது மூதாட்டி தனது பிறந்தநாளை நான்கு தலைமுறையினருடன் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் 105 வயதான இவரது சகோதரியும் பங்கேற்று வாழ்த்தினார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கூடக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ராசு. இவரது மனைவி வேலாயி. இவர்களுக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். ராசு தனது 93வது வயதில் இறந்தார். இதனையடுத்து வேலாயி மகன்கள், மகள்களுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வேலாயிக்கு 98 வது பிறந்தநாள். சதம் அடிக்க இன்னும் ஈராண்டுகள் இருக்கும் நிலையில், பாட்டியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட பேரன், பேத்திகள் முடிவு எடுத்தனர். இதனை நான்கு தலைமுறை கொண்ட அவரது குடும்பத்தினர் ஏற்றனர்.

அதன்படி வேலாயி இல்லத்தில் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன்கள், கொள்ளுப்பேத்திகள் என அனைவருடன் இணைந்து வேலாயி பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். கிராம மக்களும் வேலாயிக்கு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர். சிறப்பம்சமாக வேலாயி பாட்டியின் 105 வயது அக்கா கருப்பாயியும் பங்கேற்று, தங்கைக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து 2 மூதாட்டிகளுடன் அமர்ந்து அவர்களது குடும்பத்தினர் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். வேலாயி பாட்டி சதமடித்து (நூறாண்டு) வாழ கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post ‘நூறு ஆண்டு காலம் வாழ்க’ 98 வயது தங்கைக்கு ‘பர்த்டே’ 105 வயது அக்கா வாழ்த்து: 4 தலைமுறையினர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: