ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பிய சம்மனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்த வழக்கில் போலீஸ் பதில் தர ஐகோர்ட் உத்தரவு..!

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பிய சம்மனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்த வழக்கில் போலீஸ் பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு ‘ஆருத்ரா’ என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு மாதம் 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்து, தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு மக்களிடம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பேரிடம் சுமார் ரூ.2,438 கோடி பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணையில் நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது; சம்மனை ரத்து செய்ய வேண்டாம். இந்த சம்மன் அனுப்பபட்டது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து காவல்துறை பதிலளிக்கும்வரை சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற ஆர்.கே.சுரேஷ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, காவல்துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி சந்திரசேகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; அரசு தரப்பில் வழக்கறிஞர், மனு குறித்து பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

The post ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பிய சம்மனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்த வழக்கில் போலீஸ் பதில் தர ஐகோர்ட் உத்தரவு..! appeared first on Dinakaran.

Related Stories: