தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். நாளை முதல் ஜூன் 11-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 08:30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காலை 11:30 மணி அளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மாலை 05:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் “பிப்பர்ஜாய்” புயலாக மேலும் வலுவடைந்தது.

இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05:30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று, காலை 08:30 மணி அளவில் கோவாவில் இருந்து மேற்கு தென்மேற்கே சுமார் 880 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 990 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, அதன் பிறகு வடக்கு வடமேற்கு திசையில் அதற்கடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை: இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். வெப்பஅலை எச்சரிக்கை: தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் எனவும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை; அரபிக்கடல் பகுதிகள்: இன்று வடக்கு கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 105 முதல் 115 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 125 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, இரவு முதல் அதே பகுதிகளில் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 155 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் பகுதிகள்: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: