ஆண்டிபட்டி தனியார் மதுபான கூடங்களில் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனையா?

*அதிகாரிகள் அதிரடி சோதனை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் தனியார் மதுபான கூடங்களில் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து சிலர் பலியான நிலையில், இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் மதுபான கடைகளில் போலி மதுபானங்கள் விற்பனை குறித்து கண்காணிக்க தமிழக அரசு அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டது.

இதில் ஒருபகுதியாக தேனி மாவட்டத்தில் செயல்படும் தனியார் மதுபான கடைகளில் போலி மதுபானங்கள் மற்றும் வெளிமாநில மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.இதனையடுத்து பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, ஆண்டிப்பட்டி தாசில்தார் சுந்தர்லால் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் செயல்பட்ட தனியார் மதுபான கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அரசு கிட்டங்கியில் இருந்து கொண்டு வரப்பட்ட மதுபானங்களை தவிர வெளிமாநில மதுபானங்கள் ஏதும் விற்பனை செய்யப்படுகிறதா? நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்கப்படுகிறதா? என்பது குறித்து தனியார் மதுபான விற்பனையாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். அதிகாரிகளுடன் ஆண்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவரியம்மாள் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் வெளிமாநில மதுபானங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஆண்டிபட்டி தனியார் மதுபான கூடங்களில் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனையா? appeared first on Dinakaran.

Related Stories: